பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி ஊழல்: 15 நகரங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஊழல் புகாரில் 15 நகரங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11,400 கோடி ரூபாய் ஊழல் புகார் தொடர்பாக நாட்டின் 15 நகரங்களில் 46 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடியாக பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் மற்றும் வங்கி ஊழியர்கள் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மோசடி புகாருக்கு ஆளாகியுள்ள நீரவ் மோடி கடந்த மாதமே தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நீரவ் மோடி மற்றும அவரது மனைவி ஆகிய இருவரையும் கண்காணிக்கப்படும் நபர்களாக சிபிஐ ஏற்கெனவே அறிவித்துள்ளது. மேலும் அவர்களைக் கைது செய்ய இண்டர்போலின் உதவியையும் சிபிஐ நாடியுள்ளது.
வங்கி மோசடிக்கு உதவியதாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, வங்கி ஊழியர் மனோஜ் காரத் மற்றும் நீரவ் மோடி நிறுவன ஊழியர்களை சிபிஐ கைது செய்துள்ளது.
இதனிடையே நீரவ் மோடி தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். மும்பை, டெல்லி உட்பட நாடுமுழுவதும் பல நகரங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
மொத்தம் 15 நகரங்களில் 46 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நீரவ் மோடிக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கவும் அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.