பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் அங்கமே... அனைத்து கட்சிக் கூட்டத்தில் மோடி திட்டவட்டம்
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரும் இந்தியாவின் ஒரு அங்கம்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானி, பாதுகாப்புப் படையினருடன் கடந்த மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 6,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் பிரச்னைகள் எழுப்பின. இந்நிலையில் ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த புதன்கிழமை பேசியபோது, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
இதன்படி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியாவின் ஒரு அங்கமே
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர் பகுதியும், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஓர் அங்கம்தான். தேசப் பாதுகாப்பு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளப்பட மாட்டாது.
ஒரே குரலால் மகிழ்ச்சி
அதேசமயம், ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களின் நம்பிக்கையையும் நாம் பெற வேண்டும். காஷ்மீரில் நடைபெறும் சம்பவங்களால் ஒவ்வோர் இந்தியரையும் போல நானும் மிகவும் வேதனையடைந்துள்ளேன். இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.
பாக். காரணம்
காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலைக்கு, பாகிஸ்தானால் ஆதரவு அளிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம்தான் காரணமாகும். ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு மதத்தினரும், நாடு முழுவதும் வசித்து வருகின்றனர். அவர்களை அந்தந்த மாநில அரசுகள் அணுகி, தாங்கள் தற்போது வசிக்கும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் உறவினர்களிடம் தெரிவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தீர்வு காண்போம்...
ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பிரச்னைக்கு, அரசமைப்புச் சட்ட கோட்பாடுகளுக்கு உள்பட்டு நிரந்தர, அமைதித் தீர்வை காண்பதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அரசமைப்பு சட்டத்துக்கு உள்பட்டு அனைத்து தரப்பினரின் துயரங்களுக்கும் தீர்வு காண்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.
பாக். பதிலளிக்க வேண்டும்
ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பலூசிஸ்தானிலும் பாகிஸ்தான் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது. அப்பகுதிகளில் நிகழ்த்தி வரும் அட்டூழியங்களுக்காக சர்வதேச சமூகத்திடம் பாகிஸ்தான் பதில் அளிக்க வேண்டும்.
மன்மோகன்சிங்
இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியபோது, காஷ்மீரில் நிலவும் பதற்றத்தை தணிக்க மத்திய அரசு எத்தகைய நடவடிக்கையை எடுத்தாலும் அதற்கு தங்களது கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்றார்.
லோக்சபா ஒத்திவைப்பு
முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் அமைதியும் ஒழுங்கும் திரும்புவதற்கு அவசர நடவடிக்கைகளை எடுக்கக் கோரும் தீர்மானம் லோக்சபாவில் நேற்று ஒருமனதாக நிறைவேறியது. இத் தீர்மானம் நிறைவேறிய சில நிமிடங்களில் லோக்சபா மழைக்காலக் கூட்டத்தொடரை சுமித்ரா மகாஜன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.