போகிமான் கோ விளையாட்டில் முட்டை... தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ்
அகமதாபாத்: போகிமான் கோ விளையாட்டில், கோயில்களில் முட்டைகள் இருப்பது போன்று காட்சிகள் காட்டப்படுவதால் இந்து சென்டிமெண்டுக்கு எதிராக உள்ளது. எனவே, இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், மத்திய அரசுக்கும் இதனை உருவாக்கிய அமெரிக்க நிறுவனத்திற்கும் குஜராத் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள சாப்வேர் நிறுவனம் ஒன்று போகிமான் கோ என்ற விளையாட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த விளையாட்டை விளையாடுவதால் பல்வேறு சிக்கல்கள் உருவாகி வருவதாக அமெரிக்காவிலேயே குற்றசாட்டு எழுந்தது. இந்த விளையாட்டு இப்போது இந்தியாவிலும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
போகிமான் விளையாட்டில் இந்து கோயில்களில் முட்டைகள் இருப்பது போன்று காட்சிகள் உள்ளன. முட்டை என்பது அசைவ உணவாகும். இந்த உணவு இந்து மற்றும் ஜைன கோயில்களில் இருப்பது போன்று காட்டப்பட்டு வருகிறது. இது இந்து கடவுள்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. இதனால் இந்துக்களின் மனது புண்படுகிறது. எனவே, போகிமான் கோ விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அலய் அனில் தவே என்பவர் பொது நல வழக்கு ஒன்றை குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள், சுபாஷ் ரெட்டி மற்றும் விபுல் பன்சாலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கும் இந்த விளையாட்டை உருவாக்கிய அமெரிக்க நிறுவனத்திற்கும் பதில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.