கர்னி சேனா நடத்திய வன்முறை எதிரொலி.. பாஜகவை சேர்ந்த சூரஜ் பால் அமு கைது!
ஹரியானா பாஜக ஊடக ஒருங்கிணைப்பாளர் சூரஜ் பால் அமு முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு இருக்கிறது.
Recommended Video
அஹமதாபாத்: பத்மாவத் படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. சில மாநிலங்களில் இருக்கும் கர்னி சேனா என்ற ஹிந்துத்துவா அமைப்பு இந்த படத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த அமைப்பு நேற்று டெல்லியில் பள்ளி வாகனம் ஒன்றை அடித்து நொறுக்கியது. உள்ளே மாணவர்கள் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் இந்த செயலை அந்த பயங்கரவாத அமைப்பு செய்துள்ளது.
இந்த நிலையில் அந்த அமைப்பிற்கு நெருக்கமான ஹரியானா பாஜக ஊடக ஒருங்கிணைப்பாளர் சூரஜ் பால் அமு கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
பட சர்ச்சை
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்த வரலாற்றுத் திரைப்படமான பத்மாவத்க்கு பெரிய எதிர்ப்பு நிலவி வருகிறது. ராஜஸ்தானின் சித்தூர் அரசி பத்மாவதி குறித்த வரலாற்றுப் படம் என்பதால் ராஜஸ்தானை சேர்ந்த பாஜக கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப்படம் வரலாற்றை தவறாக சித்தரிப்பதாகக் கூறி ராஜ்புத் கார்னி சேவா, ஆர்.எஸ்.எஸ், கர்னி சேவா போன்ற அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.
தொடர் வன்முறை
குஜராத், உத்தரபிரதேசம், டெல்லி , ஹரியானா என பத்மாவத் படம் திரையிடப்படும் இடங்களில் எல்லாம் வன்முறை வெடித்தது. தியேட்டர்கள் தாக்கப்பட்டது. எல்லை மீறிய கர்னி சேவா அமைப்பு பள்ளி வாகனத்தை எல்லாம் தாக்கியது.
கைது செய்யப்பட்டார்
இந்த பிரச்சனையில் முதலில் 8 கர்னி சேனா அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது ஹரியானா பாஜக ஊடக ஒருங்கிணைப்பாளர் சூரஜ் பால் அமு கைது செய்யப்பட்டு இருக்கிறார். முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தலையை கேட்டவர்
இவர் கடந்த இரண்டு மாதமாக பத்மாவத் படத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். கடந்த நவம்பரில் இந்த படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, நடிகர் தீபிகா படுகோன் ஆகியோரின் தலையை கேட்டு இருந்தார். இவர்களின் தலையை வெட்டி கொடுப்பவர்களுக்கு 10 கோடி கொடுக்கப்படும் என்று பேசி இருந்தார்.