பாஸு நல்லா பாருங்க.. போனே இல்லை.. கல்லுதான் இருக்கு.. அமேசானுக்கே அல்வா கொடுத்த பலே நபர்!
அமேசான் நிறுவனத்தை வித்தியாசமான முறையில் ஏமாற்றி 50 லட்சம் மோசடி செய்த டெல்லி வாலிபர் போலீசாரால் கைது!
Recommended Video
டெல்லி: டெல்லியை சேர்ந்த சிவம் சோப்ரா என்ற நபர் அமேசான் நிறுவனத்தை ஏமாற்றி வித்தியாமான முறையில் மோசடி செய்துள்ளார்.
166 போன்களை அமேசானில் ஆர்டர் செய்து வாங்கிவிட்டு , பின் பார்சலில் வெறும் கல்தான் இருந்தது என்று கூறி அதை திருப்பி அனுப்பி உள்ளார். இதன் மூலம் 50 லட்சம் ரூபாய் வரையில் இவர் சம்பாதித்து உள்ளார்.
பலநாட்களாக இவரைத் தேடி வந்த போலீசார் நேற்று இவரை டெல்லியின் மார்க்கெட் பகுதி ஒன்றில் கைது செய்தனர்.
வேலை இல்லாதவர்
டெல்லியின் வடக்குப் பகுதியில் உள்ள ரோஹிணி நகரைச் சேர்ந்தவர் சிவம் சோப்ரா. இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர். அந்தத் துறை சம்பந்தமாக சரியான வேலை எதுவும் கிடைக்காததால் இவர் பலநாட்களாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். இதனால் இவர் குடும்பம் மொத்தமும் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்திருக்கிறது.
வித்தியாசமான பிசினஸ்
இந்த நிலையில் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க இவர் புது பிசினஸ் ஒன்றை தொடங்கும் திட்டத்தை உருவாக்கி இருக்கிறார். இதன் படி அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் இருந்து மொபைல் வாங்கத் தொடங்கி இருக்கிறார். ஆப்பிள், சாம்சங், மோட்டோ என விலை உயர்ந்த மொபைல்களை மட்டுமே இவர் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இதை அவ்ருக்குத் தெரிந்த மொபைல் கடைகளில் விற்று சம்பாதிக்க தொடங்கி இருக்கிறார்.
இதுவரை 50 லட்சம் மோசடி
ஆனால் அவர் இதோடு நிற்காமல் , ''அமேசான் அனுப்பிய பார்சலில் வெறும் கல் தான் இருந்தது , மொபைல் எதுவும் இல்லை'' என்று கூறி பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இதன் காரணமாக அமேசான் நிறுவனமும் இவருக்கு அந்த மொபைலுக்கான தொகையை திரும்ப அளித்துள்ளது. இதையடுத்து இவர் அதே அமேசான் நிறுவனத்தில் வெவ்வேறு பெயர், மற்றும் அட்ரஸ்களில் மொபைலை ஆர்டர் செய்து வாங்கி பின் ரீபண்ட் கேட்கும் செயலில் இறங்கி இருக்கிறார். இதன் மூலம் மட்டுமே இது வரை 50 லட்சம் சம்பாதித்துள்ளார் இவர்.
கைது செய்த போலீஸ்
இவரது மோசடி குறித்து அறிந்த போலீசார் இவரை பல நாட்களாக தேடி வந்தனர். இவரைக் கண்டுபிடிக்க திணறி வந்த போலீசார் , தற்போது இவர் மொபைல் விற்கும் கடைகளை கண்டுபிடித்து அதன் மூலம் இவரைப் பிடித்துள்ளது. இந்த மொபைல் போன்களை இவர் ஆர்டர் செய்ய இது வரை அடையாள அட்டை இல்லாமல் 141 சிம் கார்ட் வாங்கி , பின் அந்தப் போன் நம்பர்களைப் பயன்படுத்தி உள்ளதும் தெரியவந்துள்ளது. இவர் சம்பாரித்த தொகையில் 10 லட்சம் ரூபாயைப் பத்திரமாக பேங்கில் சேர்த்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..