தமிழக அரசை கண்டித்து போராட்டம்.. புதுமண தம்பதியுடன் சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது
திமுக மற்றும் தோழமை கட்சிகள் சென்னையில் பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்திய போது, ஸ்டாலின் புதுமண தம்பதிகளுடன் போராட்டம் நடத்தினார்.
சென்னை: திமுக மற்றும் தோழமை கட்சிகள் சென்னையில் பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்திய போது, ஸ்டாலின் திமுகவை சேர்ந்த புதுமண தம்பதிகளுடன் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் மிகவும் அமைதியாக நடந்து வந்த போதிலும் போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசின் இந்த கொடூர செயலுக்கு எதிராக திமுக அதன் தோழமை கட்சிகளுடன் சேர்ந்து சென்னையில் மறியல் போராட்டம் நடத்தியது.
சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்தினார்கள்.
கழுத்தில் மணமாலை,கருத்தில் கொள்கை,நினைவெல்லாம் மக்கள் நலன். அதனால்தான் மணமேடையிலிருந்து நேராக கழகம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றனர் புதுமணத் தம்பதியர்.
— M.K.Stalin (@mkstalin) May 25, 2018
தூத்துக்குடி கொடூரத்திற்காக அச்சிறுபாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமைக்கு வாழ்த்துகிறேன்#TNBandh4SterliteKillings pic.twitter.com/efTPMJXFHW
இதில் மதுராந்தகம் பகுதியில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திமுக கட்சியை சேர்ந்த புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்து நேரடியாக மணக்கோலத்தில் வந்து போராட்டம் நடத்தினார்கள். ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.
அங்கு வந்த போலீஸ் செங்கல்பட்டு அருகே அச்சிறுப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்ட போது ஸ்டாலின் மற்றும் தொண்டர்களை கைது செய்தது. புதுமண தம்பதிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலினை வாகனத்திற்குள் ஏற்றவிடாமல் தடுத்து திமுகவினர் போராட்டம் செய்தனர். இதனால் திமுகவினர் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.