உ.பியில் பாலியல் புகார் அளித்த பெண்ணின் தந்தை கொலை.. பாஜக எம்.எல்.ஏவின் தம்பி அதிரடி கைது
உத்தர பிரதேசத்தில் போலீஸ் காவலில் மரணமடைந்த சுரேந்தர் சிங் வழக்கு குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் போலீஸ் காவலில் மரணமடைந்த சுரேந்தர் சிங் வழக்கு குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரின் சகோதரர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
தன்னை பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் ஒருவருடத்திற்கு முன்பு பாலியல் வன்புணர்வு செய்தார் என்று பெண் ஒருவர் குற்றச்சாட்டு வைத்தார். இதுகுறித்து பலரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.
இதனால் அந்த பெண் குடும்பத்தோடு உத்தர பிரதேச முதல்வர் யோகியின் வீடு முன்பு சென்று தீ குளிக்க முயன்றார். போலீஸ் தற்போது இதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
சண்டை
ஆனால் எம்.எல்.ஏ குல்தீப் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குல்தீப்பின் சகோதரரும், சில பாஜக ஆட்களும் அந்த பெண்ணின் தந்தை சுரேந்திர சிங்கை தாக்கி உள்ளனர். ஆனால் போலீஸ் பாஜக ஆட்களை கைது செய்யாமல் சுரேந்திர சிங்கை கைது செய்தது.
இறந்தார்
அடிப்பட்ட காயத்தால் போலீஸ் நிலையத்தில் சுரேந்திர சிங் உடல் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. இதையடுத்து இரவோடு இரவாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். உடலில் அதிக அளவில் இரத்த இழப்பு ஏற்பட்டு இருப்பதால் அவர் மரணடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழப்பம்
இதில் இரண்டு குழப்பங்கள் நிலவி வருகிறது. அவர் போலீஸ் அடித்ததில் மரணம் அடைந்தார் என்று தற்போது புதிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலில் பாஜக கட்சி உறுப்பினர்கள் தாக்கியதில் அவர் மோசமாக காயமடைந்து, சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் மரணம் அடைந்தார் என்று கூறப்பட்டது.
விசாரிக்கும் படை
இந்த சம்பவத்தை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அந்த எம்.எல்.ஏ குல்தீப்பையும் விசாரிக்க இருக்கிறார்கள். இதில் சோனு, பாவ், வினித், ஷைலு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோரும் பாஜக கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பி கைது
அந்த எம்.எல்.ஏவின் தம்பி தற்போது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். சுரேந்திரா சிங்கிங் மனைவி கொடுத்த புகாரின் பேரில் பாஜக கட்சியை சேர்ந்த அணில் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்காக தற்போது குல்தீப் பெயில் கேட்டு விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.