50 வருட போராட்ட வாழ்க்கையில் முதல் முறை.. போலீசிடம் அடி வாங்கிய வாட்டாள் நாகராஜ் #cauvery
பெங்களூர்: தனது 50 வருட போராட்ட வாழ்க்கையில் முதல் முறையாக போலீசார் தன்னை தாக்கிவிட்டதாக கூறி கன்னட அமைப்பினரை தூண்டிவிட்டுள்ளார் கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ்.
காவிரி விவகாரத்திற்காக கடந்த திங்கள்கிழமை பெங்களூரில் கன்னட அமைப்பிர் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. தாமதமாக விழித்துக் கொண்ட காவல்துறை 16 காவல் சரகங்களில் ஊரடங்கு உத்தரவையும், மொத்த பெங்களூருக்கும் 144 தடையுத்தரவையும் பிறப்பித்தது.
ஊரடங்கு உத்தரவு நேற்று காலை முதல் விலக்கிக்கொள்ளப்பட்டாலும், 144 தடையுத்தரவு வரும் 25ம் தேதிவரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு மேல் மொத்தமாக கூடினாலே கைது செய்ய இந்த சட்டப்பிரிவு வகை செய்கிறது.
இந்நிலையில், பெங்களூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற, கன்னட போராட்டக்காரர் வாட்டாள் நாகராஜ் இன்று கைது செய்யப்பட்டார். போராட்டம் முடக்கப்பட்டது. வாட்டாளும், அவருடன் சேர்ந்த போராட்டக்காரர்களும், மைசூர் சாலையிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், நிருபர்களிடம் வாட்டாள் கூறியதாவது: என்னை கைது செய்தபோது, இரு போலீஸ்காரர்கள் என் தலைமீது குறிவைத்து அடித்தனர். எனது, 50 வருட போராட்ட வாழ்க்கையில் முதல் முறையாக போலீசார் என்னை அடித்துவிட்டனர்.
காவிரிக்காக போராடிய போராட்டக்காரர்களை, போலீசார் விடுதலை செய்யாவிட்டால், மீண்டும் கர்நாடகா பந்த் நடத்த அழைப்புவிடுக்கப்படும் என்றார் வாட்டாள் நாகராஜ்.