சாமியார் ராம்பாலிடம் ஹரியாணா போலீஸ் 5 நாள் விசாரணையை தொடங்கியது!!
சண்டிகர்: சர்ச்சை சாமியார் ராம்பாலுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரிடம் விசாரணையை ஹரியானா போலீஸார் இன்று தொடங்கினர்.
ராம்பாலின் ஆசிரமத்தில் கடந்த 2006-ம் ஆண்டு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராம்பால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் பிடிவாரன்ட் பிறப்பித்தும் ராம்பால் ஆஜராகாததால் அதிருப்தி அடைந்த பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம், மீண்டும் பிடிவாரன்ட் பிறப்பித்தது. வெள்ளிக்கிழமைக்கும் ராம்பாலை ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, ராம்பாலை கைது செய்வதற்காக அவரது ஆசிரமத்தின் முன்பு கடந்த 18-ந் தேதி நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனால் அப்போது ராம்பாலின் ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டதுடன், பெட்ரோல் குண்டுகளையும் வீசினர்.
அதற்கு பதிலடியாக போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி தடியடிநடத்தினர். இதில் போலீஸார், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனால் ஆசிரமம் அமைந்திருக்கும் ஹிஸார் போர்க்களமாக காட்சியளித்தது. இந்த விவகாரத்தால் ராம்பாலை கைது செய்வது ஹரியாணா மாநில காவல்த்துறைக்கு பெரும் சவாலாக இருந்தது.
பின்னர் நேற்று முன்தினம் இரவோடு இரவாக சாமியார் ராம்பாலை அதிரடியாக போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுதினர். அவரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ஹிஸார் உயர்நீதிமன்றம் அனுமதித்தது.
இதனைத் தொடர்ந்து ஹரியானா போலீஸார் இன்று ரம்பாலிடம் விசாரணையைத் தொடங்கினர். இந்த விசாரணை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.