'சீட்' 'சீட்டிங்'- சிக்கினார் காங். ரேணுகா சவுத்ரி! ரூ1.10 கோடி ஆட்டைய போட்டதாக கேஸ் போட்டது போலீஸ்!
ஹைதராபாத்: ஆந்திரா சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ1.10 கோடி லஞ்சம் வாங்கி ஏமாற்றியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி மீது தாழ்த்தப்பட்டோர்- பழங்குடியினர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2013ஆம் ஆண்டு ஆந்திரா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது கம்மம் மாவட்டம் வய்ரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார் பி. கலாவதி. இத்தொகுதி பழங்குடி இன தொகுதியாகும்.
காங்கிரஸ் கட்சியில் சீட் வாங்கித் தருவதற்காக மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரியிடம் கணவர் ராம்ஜி நாயக் மூலம் ரூ1.10 கோடி லஞ்சமாகவும் கலாவதி கொடுத்திருக்கிறார்.
ஆனால் ரேணுகா சவுத்ரி சீட்டு வாங்கித் தரவில்லை. பின்னாளில் கடன் நெருக்கடியால் கலாவதியின் கணவர் ராம்ஜியும் காலமாகிவிட்டார். இதனையடுத்து தாம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டிருக்கிறார் கலாவதி. ஆனால் பணத்தைத் திருப்பித் தர மறுத்த ரேணுகா சவுத்ரி தமது ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும் கலாவதி புகார் கிளப்பினார்.
அத்துடன் ரேணுகா சவுத்ரி மீது ஆந்திரா உயர்நீதிமன்றத்திலும் வழக்குப் போட்டார் அவர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ரேணுகா சவுத்ரி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து ஹைதராபாத் போலீசார் உடனடியாக ரேணுகா சவுத்ரி மீது வழக்கு தொடர்ந்தனர். அவர் மீது மோசடி மற்றும் கிரிமினல் மிரட்டலில் ஈடுபட்டதாகவும் தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ரேணுகா, என் மீதான குற்றச்சாட்டுகளால் பெரிதும் கவலையடைந்துள்ளேன். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கு. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா என கேள்வியெழுப்பினார்.
ஆனால் கலாவதியோ தன்னிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக பதிலடி கொடுத்திருக்கிறார். இதனால் ரேணுகா சவுத்ரிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.