உ.பியில் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய புலந்த்சாகர் எஸ்.பி. அதிரடி இடமாற்றம்
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில், புலந்த்சாகர் வன்முறை சம்பவத்தில், அதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக மாவட்ட எஸ்.பி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை பசுவதையை மையமாக வைத்து மஹாய் என்ற கிராமத்தில் கலவரம் ஏற்பட்டது. அதில், சாய்னா காவல்நிலையத்தின் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு ஆய்வாளரின் உயிரை பலிவாங்கியதாகக் கூறப்பட்டது. மேலும், 20 வயது இளைஞரும் கலவரத்தில் பலியானார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை ஒரு விபத்து என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கொலைவழக்கில், கலவரத்தில் ஈடுபட்ட பஜ்ரங் தள் மாவட்ட அமைப்பாளர் யோகேஷ் ராஜ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், சுபோத்தை அவரது துப்பாக்கியை பிடுங்கி சுட்டது ராணுவ வீரரான ஜீத்து என்பது தெரியவந்தது. ஆனால், இதை ஜூத்துவின் தாயாரான ரத்தன் கவுர் மறுத்துள்ளார்.
கலவரத்தின் போது எடுக்கப்பட்ட பலரது கைப்பேசிகளின் வீடியோ பதிவுகளில் சுபோத்தை ஜீத்து சுடும் காட்சி ஆதாரமாகக் கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கலவரத்தின் போது அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி, புலந்த்சாகர் மாவட்ட எஸ்பியான கிருஷ்ண பாகதுர் சிங் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் அவரை உளவுத்துறை ஏடிஜி பணியிட மாற்றம் செய்துள்ளார். வன்முறை சம்பவத்தின் போது திறம்பட செயல்பட்டு, கலவரத்தை அடக்க கிருஷ்ண பாகதுர் சிங் தவறி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கலவரத்தின் போது, முன் எச்சரிக்கையாக கூடுதல் பாதுகாப்பு படையையும் குவிக்க தவறி விட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், ஏற்கனவே, காவல் அதிகாரி சத்ய பிரகாஷ், மொராதாபாத் காவலர் பயிற்சி பள்ளிக்கு மாற்றப்பட்டு விட்டார். காவலர் சுரேஷ்குமார் என்பவரும் லலித்பூர் பகுதிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். தற்போது, காவல்துறை எஸ்பி கிருஷ்ண பாகதுர் சிங் என மொத்தம் 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆளும் பாஜகவுக்கு விவகாரம் தொடர்ந்து நெருக்கடி தந்தால், மேலும் பல தலைகள் உருளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.