ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்ட பத்ரிநாத் பூசாரி... துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்!
டேராடூன்: மர்மமான முறையில் வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பத்ரிநாத் கோவில் பூசாரி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்த துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத்தில் டீர்த் புரோஹிட் பகுதியில் வசித்து வந்தவர் பிரகாஷ் பட் (50) என்ற பூசாரி. இவர் கடந்த சனிக்கிழமையன்று இரவு தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
பிரகாஷ் பட்டின் உடலை முதலில் அவரது சக பூசாரி ஒருவரே கண்டு போலீசுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். கோவில் பூஜைக்கு வராதது குறித்து நேரில் விசாரிக்க வந்தபோது, பிரகாஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
பிரகாஷின் தலையில் பல காயங்கள் இருந்ததாகவும், காதிலிருந்து ரத்தம் வடிந்தவாறு காணப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனபோதும், பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் கிடைத்தபிறகே இது தொடர்பாக தெளிவான விவரங்கள் அறிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய புனித தலமான பத்ரிநாத்தில் இவ்வாறு பூசாரி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது அங்குள்ளோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இக்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.