சன்னி லியோன் குறித்த சர்ச்சை... ராம் கோபால் வர்மா மீது போலீசில் புகார்!
ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக இந்துமத குழுவை சேர்ந்த பிரதிக்ஷா என்பவர் கோவா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மும்பை: நடிகை சன்னி லியோன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது கோவா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா டிவிட்டர் பக்கத்தில், உலகில் உள்ள அனைத்து பெண்களும் சன்னி லியோன் போன்று ஆண்களுக்கு மகிழ்ச்சியை தர வேண்டும் என விரும்புகிறேன் என பதிவிட்டிருந்தார்.
இதற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. ராம் கோபால் வர்மாவை கண்டித்து கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ராம் கோபால் வர்மாவின் இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதாக பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக இந்துமத குழுவை சேர்ந்த பிரதிக்ஷா என்பவர் கோவா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், ராம் கோபால் வர்மாவின் டிவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கவேண்டும் என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மும்பையிலும் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனிடையே ராம்கோபால் வர்மாவின் படத்தில் பணியாற்றுவதை புறக்கணிப்பதாக சில திரைப்பட தொழிலாளர்கள் சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.