8 வருட போராட்டத்திற்குப் பின்னர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி போலீஸ் தம்பதி சாதனை!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேரந்த போலீஸ் தம்பதி, எட்டு வருட கடின முயற்சிக்குப் பின்னர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.
புனேவை சேர்ந்தவர்கள் தினேஷ் ரத்தோடு, தார்கேஷ்வரி தம்பதி. 30 வயதுகளில் உள்ள இவர்கள் இருவரும் போலீஸாக பணிபுரிந்து வருகின்றனர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பது இவர்களது வாழ்நாள் லட்சியமாக இருந்து வந்தது. இதற்காக கடந்த எட்டு வருடங்களாக அவர்கள் கடின முயற்சி செய்து வந்தனர். இதற்காக அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப் போட்டுள்ளனர். மலை ஏறுதல், ஸ்கை டைவிங் போன்ற சாகச நிகழ்விலும் இந்த தம்பதி ஈடுபட்டு வந்துள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முடிவு செய்தனர். ஆனால் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அவர்கள் அதை ஒத்திவைத்தனர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் விடுமுறையில் சென்றனர். இதையடுத்து கடந்த மே மாதம் 23-ம் தேதி இந்த சாதனையை இவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
இதுகுறித்து தார்கேஷ்வரி கூறுகையில், ‘‘ எங்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது, அதன் பின்னர் நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்று தீர்மானித்து இருந்தோம். இந்த சாதனையை செய்த பிறகே குழந்தை பெற்று கொள்வது என்றும் முடிவு செய்திருந்தோம். தற்போது, இந்த வெற்றி சாதனை குறித்த செய்தியை உலகத்திற்கு தெரியப்படுத்துவதில் மகிழ்சியடைகிறோம். தற்போது குழந்தை பெற்றுக் கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய போலீஸ் தம்பதி என்ற சாதனையை அவர்கள் புரிந்துள்ளனர்.