வேளாண் அமைச்சருக்குப் பதில் வருவாய் துறை அமைச்சரின் வீட்டுக்குப் போன ஏ.டி.ஜி.பி!
கேரள மாநில காவல்துறை புலனாய்வு துறை ஏ.டி.ஜி.பி, வேளாண் துறை அமைச்சரின் வீட்டுக்குச் செல்வதற்கு பதிலாக வருவாய் துறை அமைச்சரின் வீட்டுக்கு சென்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.
திருவனந்தபுரம் : கேரள மாநில காவல்துறை புலனாய்வு துறை ஏ.டி.ஜி.பி, வேளாண் துறை அமைச்சரின் வீட்டுக்குச் செல்வதற்கு பதிலாக வருவாய் துறை அமைச்சரின் வீட்டுக்கு சென்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.
கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு காவல்துறையை தன் வசம் வைத்து கொண்டார் பினராயி விஜயன். மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு மற்றும் இக்கட்டான சூழ்நிலைகள் குறித்து காவல் துறை அதிகாரிகளின் அறிக்கைகள் முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கேரள மாநில காவல்துறை புலனாய்வு பிரிவின் கூடுதல் டிஜிபியும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான முகம்மது யாசின், குறிப்பிட்ட அமைச்சரை தெரிந்து வைத்திருக்காமல் வேறு ஒரு அமைச்சரின் வீட்டுக்கு சென்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.
கேரள மாநில வேளாண் துறை அமைச்சர் சுனில்குமாரை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றார் ஏடிஜிபி. அப்போது அமைச்சரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அமைச்சரிடம் நீங்கள் தானே சுனில்குமார் என்று யாசின் கேட்டுள்ளார். இதனால் அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவர் வருவாய் துறை அமைச்சர் சந்திர சேகரன்.
இதைத் தொடர்ந்து யாசின் வீடு மாறி வந்ததை வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகரன் உணர்ந்தார். பின்னர் யாசினுடன் ஊழியர் ஒருவரை அனுப்பி அமைச்சர் சுனில்குமாரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
காவல்துறை புலனாய்வு பிரிவு ஏ.டி.ஜி.பி. ஒருவரே அமைச்சர் யார்? என்று அடையாளம் தெரியாத அளவிற்கு வீடு மாறி சென்ற சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.