லக்னோ: துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம் பெண் சடலம்... அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கல்லூரி மாணவியின் உடல் துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்ததைக் கண்ட உள்ளூர்வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
செவ்வாய்கிழமை இரவு ஆமினாபாத் பகுதியில் சுமார் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணின் கால்கள் மட்டும் கிடந்ததை கண்ட சிலர் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மோப்பநாயுடன் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது மாணவியின் கால்கள் கிடந்த இடத்தில் இருந்து300 மீட்டர் தொலைவில் கான்பூர்-பைசாபாத் நெடுஞ்சாலைகளை இணைக்கும் ஷஹீத்பாத் அருகே சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் துண்டுத்துண்டாக வெட்டி சிதைக்கப்பட்ட அந்த மாணவியின் தலை, வயிறு, உள்ளிட்ட மிச்ச உடல் பாகங்கள் கிடைத்தன.
கொலையான மாணவி ஆமினாபாத் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் கௌரி ஸ்ரீவத்சவா என்றும் போலீசார் கண்டறிந்தனர். இவர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பி.எல்.படித்து வந்துள்ளார் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொடூர கொலை தொடர்பாக அந்த மாணவியின் நண்பர்கள் இருவரை கைது செய்த லக்னோ போலீசார், அவரது செல்போனுக்கு வந்த இதர அழைப்புகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.