தொடர் உண்ணாவிரதம் இருந்த ஜெகனை குண்டுகட்டாக தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்
குண்டூர்: ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக ட்ரிப்ஸ் ஏற்ற வைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த அவரின் நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து போலீசார் இன்று அதிகாலை 4 மணிக்கு உண்ணாவிரதப் பந்தலில் இருந்து ஜெகனை வம்படியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு வலுக்கட்டாயமாக ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டது. இதையடுத்து ஜெகனின் தாய் விஜயம்மா, மனைவி பாரதி, குடும்பத்தார் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த விடாமல் செய்த போலீசார் கட்சியினரின் கோபத்திற்கு ஆளாகினர். ஆந்திர மாநிலத்திற்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என்று கூறினார் ஜெகன். ஆனால் தொடர் உண்ணாவிரதத்தால் அவரால் பேசக் கூட முடியாமல் போனது கட்சியினரை கலங்க வைத்தது.
ஜெகனின் சிறுநீரில் கீடோன்ஸின் அளவு அதிகரித்ததால் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு முன்பு டாக்டர்கள் அவரை வலியுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.