தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அதிரடி- ஜிபிஎஸ் கருவிகளுடன் பறக்கும் படை வாகனங்கள்
டெல்லி: சட்டசபை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அதிரடி நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க செல்லும் கண்காணிப்பு படைகளுடன் மத்திய பாதுகாப்புப் படை செல்லும் என்றும் பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.
அசாம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய 5 மாநில தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி மே 16ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நஜீம் ஜைதி, தேர்தலின்போது வன்முறையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பணப் பட்டுவாடாவை தடுக்க ஜிபிஎஸ் கருவி வசதிகளுடன் பறக்கும் படை அமைக்கப்படும் என்றார்.
பண பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்புப் படைகளுடன் மத்திய பாதுகாப்புப் படை செல்லும் என்றும், கண்காணிப்புப் படைகளின் வாகனங்களில் ஜிபிஎஸ் பொறுத்தப்படும் என்றும் கூறினார்.
தேர்தலில் பண பலத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பண வினியோகம், பரிசுகள் வழங்குவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று கூறிய நஜீம் ஜைதி, வாக்காளர்களுக்கு பண வினியோகம், பரிசுகள் வழங்குவதை தடுக்க தனி செலவு கண்காணிப்பு பிரிவுகள் அமைக்கப்படும் என்றார்.
இதனிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஸ் லக்கானி, சட்டசபைத் தேர்தலில் பணப்பட்டுவாடா உள்பட பல்வேறு விதி மீறல்களைத் தடுப்பதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் தலா 3 பறக்கும் படைகளையும், 3 சோதனைச்சாவடிகளையும் தேர்தல் ஆணையம் அமைக்க உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 702 பறக்கும்படை, 702 சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.