பெங்களூரிலே வைக்கப் பட்டதா வெடிகுண்டு... ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆராயும் போலீசார்
பெங்களூர்: இன்று காலை சென்னை ரயில்வெ ஸ்டேஷனில் வெடித்த குண்டுகள், பெங்களூரிலேயே ரயிலில் வைக்கப் பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.
இன்று காலை சுமார் 7.25 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடித்தது. சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில், அதில் பயணம் செய்த 22 வயதுடைய சுவாதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும், காயமடைந்த 14 பேர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கவுகாத்தி ரயிலில் வெடித்த குண்டுகள் பெங்களூர் ரயில்வே ஸ்டேஷனிலேயே வைக்கப் பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதேபோல், சந்தேகத்திற்கிடமான வகையில் மர்மநபர்கள் யாரும் கையில் பொருட்கள் ஏதும் கொண்டு வருகிறார்களா என அவர்கள் பெங்களூர் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளின் துணை கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.