'டுபாக்கூர்' சாமியார் ராம்பாலை கைது செய்ய 'ஆளில்லா வேவு விமானம்" கோரும் ஹரியானா அரசு!!
பர்வாலா: பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் அடுத்தடுத்து பிடி வாரண்ட் பிறப்பித்தும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சர்ச்சை சாமியார் ராம்பாலை கைது செய்ய முடியாமல் ஹரியானா போலீசார் திணறி வருகின்றனர். கோட்டை போல் கட்டப்பட்டிருக்கும் ராம்பாலின் ஆசிரமத்துக்குள் நுழைவதற்கு முன்னதாக உள்ளே ஆயுதங்கள் இருக்கிறதா என்பதை ஆளில்லா வேவு விமானங்கள் மூலம் கண்காணிக்கவும் ஹரியானா போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஹரியானாவைச் சேர்ந்தவர் சர்ச்சை சாமியார் ராம்பால். இவரது சத்லோக் ஆசிரமம் ஹரியானாவின் ஹிசர் அருகே உள்ள பர்வாலாவில் இருக்கிறது. 2006ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் சிக்கினார் ராம்பால். இந்த வழக்கில் ஜாமீன் பெற்றிருந்தாலும் 2010 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒருபோதும் ராம்பால் ஆஜரானதே இல்லை. இதுவரை 42 முறை நீதிமன்றத்தில் ஆஜராகமல் 'விலக்கு' வாங்கிக் கொண்டிருக்கிறார் ராம்பால்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ஹிசார் நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணைக்கு நடைபெற்ற போது நீதிமன்றத்தை மிரட்டும் வகையில் ராம்பாலின் ஆதரவாளர்கள் 'அணிவகுப்பு' ஒன்றை நடத்தினர். நீதித்துறையை அச்சுறுத்தும் இந்த நடவடிக்கையை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்தது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராம்பால் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
ராம்பாலோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து ராம்பாலுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் ஹரியானா மாநில போலீசாரால் ராம்பாலை கைது செய்ய முடியவில்லை. 2வது முறையாக மீண்டும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து கடுமையான உத்தரவை பிறப்பித்தது பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம். இம்முறையும் ராம்பாலின் ஆசிரமத்தை ஹரியானா போலீசாரால் நெருங்க முடியவில்லை.
கோட்டை போல கட்டப்பட்டுள்ள ராம்பாலின் ஆசிரமத்தின் சுவர்களில் ஆயுதங்களுடன் ஏறி நின்று அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராம்பாலின் ஆதரவாளர்கள் ஹரியானா, உத்தர்காண்ட்டின் பல பகுதிகளில் இருந்து பேருந்துகளில் வந்து குவியத் தொடங்கினர். இதனால் பெரும் பதற்றம் நீடித்தது.
இந்நிலையில் நேற்றும் பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ராம்பாலை கைது செய்யாததால் நீதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். மூன்றாவது முறையாக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து வெள்ளிக்கிழமைக்குள் ராம்பாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஹரியானாவில் ஆளும் பாஜக அரசில் பலர் ராம்பாலின் ஆதரவாளர்கள். அவர்கள் மூலமாக ராம்பால் ஆசிரம நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை.
இதனிடையே ராம்பாலை கைது செய்தால் 'தீக்குளித்து தற்கொலை'ப்படையாக மாறுவோம் என்று சில இளைஞர்கள் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு போலீசாரை எச்சரித்தனர். இதனால் ராம்பால் ஆசிரமத்தைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான ரிசர்வ் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் வெளியூர்களில் இருந்து வந்த ராம்பால் ஆதரவாளர்களை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ராம்பால் ஆசிரமத்துக்குள் நுழைந்தால் அவரது ஆதரவாளர்கள் ஆயுதங்கள், வெடிபொருட்கள் வைத்து தாக்குதல் நடத்துவார்களோ என்ற அச்சமும் ஹரியானா அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் உள்துறை அமைச்சகத்திடம் ஆளில்லா வேவுவிமானங்களையும் அம்மாநில அரசு கோரியுள்ளது. ஆசிரமத்துக்குள் பதுங்கிக் கொண்டு நாட்டின் நீதித்துறைக்கும் அரசுகளுக்கும் சவாலாக தனி நாடு போல் ராம்பால் செயல்படுவதாக ஹரியானா போலீசார் கொந்தளித்துப் போயுள்ளனர்.