சுனந்தா கொலை: சசி தரூரை போலீஸ் குற்றம்சாட்டவில்லையே.. சொல்வது காங்: ரஷீத் ஆல்வி
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா கொலை செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். டெல்லி போலீசாரின் இந்த அறிவிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
சசி தரூரின் மனைவி சுனந்தா டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். சுனந்தாவின் மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சுனந்தா விஷம் செலுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக டெல்லி மாநகர காவல்துறை ஆணையாளர் பி.எஸ். பாசி இன்று தெரிவித்தார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ரேணு சவுத்ரி கூறுகையில், ஒருவர் மீது கொலைப்பழி சுமத்துவது மிகவும் அபாயகரமானது. சுனந்தாவை யார் கொலை செய்தார்கள் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.
சுனந்தா கொலை செய்யப்பட்டதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியது எப்படி? அவரிடம் போலீசார் கேட்க வேண்டும் என்றார்.
மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி கூறியதாவது:
சுனந்தா கொலை செய்யப்பட்டார் என்பதை உறுதி செய்ய ஓராண்டுகாலம் டெல்லி போலீஸ் எடுத்தது ஏன்? பிரேத பரிசோதனை அறிக்கையை ஓராண்டு காலம் கிடப்பில் போட்டிருந்தது ஏன்?
போலீசார் நேர்மையாக விசாரணை நடத்துவார்கள் என்று நம்புகிறோம். சுனந்தா கொலை தொடர்பாக சசி தரூர் மீது போலீசார் எந்த ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை.
இவ்வாறு ரஷீத் ஆல்வி கூறியுள்ளார்.