'செம்மர கடத்தல் ராணி' சங்கீதாவின் கூட்டாளிகள் யார்? தமிழகம், கர்நாடகத்தில் அதிரடி விசாரணை!
செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிய சங்கீதா சாட்டர்ஜியின் கூட்டாளிகளைப் பிடிக்க திருப்பதி போலீஸார் தமிழகம், கர்நாடகத்துக்கு விரைந்துள்ளனர்.
திருப்பதி: செம்மரங்களை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிய சங்கீதா சாட்டர்ஜியுடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் குறித்து விசாரணை நடத்த திருப்பதி போலீஸார் தமிழகம், கர்நாடகத்துக்கு விரைந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சங்கீதா சாட்டர்ஜி. விமானப் பணிப் பெண்ணாக பணியாற்றிய இவர், மாடல் அழகியாகவும் வலம் வந்தார். இந்நிலையில் அவர் சென்னையை சேர்ந்த லட்சுமணன் என்பவரை 2-ஆவது திருமணம் செய்து கொண்டார்.
லட்சுமணன் செம்மரக் கடத்தல் தொழில் செய்து வந்தார். கணவருடன் சேர்ந்து சங்கீதாவும் பல ஆண்டுகளாக செம்மரக் கடத்திலில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் போலீஸாரிடம் பிடிபடாமல் போக்கு காட்டி வந்த சங்கீதா, கடந்த மார்ச் 28-ஆம் தேதி சித்தூர் போலீஸாரிடம் சிக்கினார். தற்போது சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சங்கீதா.
சங்கீதாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் செம்மரக்கடத்தல் தொழிலில் தன்னுடன் ஈடுபட்ட முக்கிய பிரமுகர்கள் குறித்த விவரங்களை தெரிவித்ததாக தெரிகிறது. சங்கீதா கொடுத்த தகவலின்பேரில் அந்த முக்கிய புள்ளிகளை பிடிக்க தமிழகம், கர்நாடகாவுக்கு ஆந்திர போலீஸார் விரைந்துள்ளனர்.
இதனிடையே சங்கீதாவின் அனைத்து சொத்துகளையும் முடக்கும் நடவடிக்கையில் சித்தூர் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று சங்கீதாவை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.