பெங்களூரு பெண்ணிடம் கணக்கில் வராத ரூ 79 லட்சம் பணம்... அத்தனையும் ரூ 2000 நோட்டு!
பெங்களூருவில் பெண் ஒருவரிடமிருந்து கணக்கில் வராத 79 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை முழுவதும் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாய் இருந்தன.
பெங்களூரு : பனஸ்வாடி பகுதியைச் சேர்ந்த பெ ண் ஒருவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 79 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை அத்தனையும் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக உள்ளதால் போலீசால் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து புதிய 500 மற்றும 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் பெங்களூருவின் பனஸ்வாடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணிடம் இருந்த 79 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
அவை அத்தனையும் 2000 ரூபாய் நோட்டுகளாய் இருப்பதைக் கண்ட போலீசார், நபர் ஒருவர் 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடிந்த நிலையில் தங்களுக்கு எப்படி இவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன என கேள்வி எழுப்பினர்.
இதற்கு அந்தப் பெண் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால் போலீசார் சந்தேகமடைந்தனர். இதையடுத்து அவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த மொத்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.