திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கடத்தல்... போலீஸ் துப்பாக்கிச் சூடு
திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கடத்தல்காரர்கள் கல்வீசித் தாக்கியதால், போலீசார் வானத்தை நோக்கிச் சுட்டு அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.
திருப்பதியை அடுத்த தீண்டக்குண்டா வனப்பகுதியில் 15 பேர் செம்மரம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களைக் கைது செய்ய போலீசார் முயற்சித்துள்ளனர்.
அப்போது அவர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிக்க, அவர்களைக் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதனால், அவர்களை எச்சரிக்கும் வகையில் எஸ்.ஐ. விஜய் நரசிம்மலு தலைமையிலான போலீசார் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்து கடத்தல்காரர்கள் தப்பி ஓடி விட்டனர். தற்போது அவர்களைப் பிடிக்க 6 பேர் கொண்ட இரு போலீசார் குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தப்பி ஓடிய கடத்தல்காரர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தகவல் இல்லை.
கடந்தாண்டு இதேபோல், ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். அதனைத் தொடர்ந்து இது என்கவுண்டர் அல்ல திட்டமிடப்பட்ட கொலை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இன்று நடந்த இந்த துப்பாக்கிச் சூடு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.