நடனப் பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்த போலீசார்... காற்றில் பறந்த கரன்சி
வாரணாசி : உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடனப் பெண்கள் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போது, அவர்கள் மீது பணத்தை வாரி இறைத்து போலீசாரும் சேர்ந்து நடனமாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாரணாசி நகரில் உள்ள மதுபான விடுதியில், பெண்கள் உட்பட ஏராளமானோர் கூடியிருக்க, நடனப் பெண்கள் இந்தி பாடல்களுக்கு வளைந்து நெளிந்து ஆடிக்கொண்டிருந்தனர்.
அதனைப் பார்த்து கொண்டிருந்த சீருடையில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், நடனப் பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்து அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.
இதனைப் பார்த்த பிறகு அங்கிருந்த போலீசாரும், ஒருவர் பின் ஒருவராக போட்டி போட்டு கொண்டு வந்து, பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்தனர். அப்போது நடனம் ஆடிய பெண்கள், போலீசாரை வளைத்து நின்று ஆட்டம் போட்டனர். அவர்களின் அசைவுக்கு ஏற்ப போலீசாரும், நடனம் ஆடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.