இந்தியாவுக்குள் போலியோ மீண்டும் நுழைவதைத் தடுக்க சொட்டு மருந்து..டெல்லியில் தொடங்கி வைத்தார் பிரணாப்
நாடுமுழுவதும் 17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று தொடங்கி வைத்தார்.
டெல்லி: இந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட 17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான திட்டத்தை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா இந்தியாவுக்குள் போலியோ மீண்டும் நுழைவதை தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதாக கூறினார்.
இளம்பில்லை வாதம் என போலியோ நோய் இந்தியா முழுவதும் ஒழிக்கப்பட்டு போலியோ ஃபிரி நாடாக உள்ளது. இதனை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான இந்தத் திட்டத்தை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, டெல்லியில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். தேசிய நோய் எதிர்ப்பு தினத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளித்து அவர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, இணையமைச்சர்கள் அனுப்ரியா படேல், ஃபக்கன் சிங் குலஸ்தே ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஜே.பி.நட்டா பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் போலியோ வைரஸ் இன்னமும் வலம் வருவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியாதாவது, இந்தச் சூழலில், முற்றிலும் போலியோ ஒழிக்கப்பட்ட இந்தியாவுக்குள் அந்த நோய் மீண்டும் நுழைவதைத் தடுக்கும் வகையில், வரும் முன் காக்கும் தடுப்பு மருந்துத் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது. தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் போலியோ நோய் கண்காணிப்பு தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.
குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் நோய்த் தடுப்பு மருந்துகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விரைவில், தட்டம்மை - மணல்வாரியம்மை நோய்களுக்கான தடுப்பு மருந்தும், வயிற்றுப்போக்கு, நிமோனியா காய்ச்சல், மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான தடுப்பு மருந்துகளையும் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு வழங்கும் திட்டம் பல கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்" இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்ச ஜே.பி.நட்டா பேசினார்.