5 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவில் மீண்டும் போலியோ வைரஸ்.. ஹைதராபாத்தில் கண்டுபிடிப்பு
ஹைதராபாத்: 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஆண்டு தோறும் போலியோ தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த நடைமுறை கொண்டுவரப்பட்ட பிறகு இந்தியா முழுவதும் போலியோ நோய் ஒழிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியா போலியோ தொற்று நோய் இல்லாத தேசமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஆம்பர்பேட்டில் உள்ள கால்வாய் நீரை பரிசோதித்ததில் அதில் போலியோ கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் வரும் 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை போலியோ தடுப்பு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதில் ஆறு வயதுக்குட்பட்ட சுமார் 3.5 லட்சம் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக ஜெனீவாவில் இருந்து 2 லட்சம் தடுப்பூசி மருந்துகளை அவசரமாக பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநில சுகாதார அமைச்சகம் நோய் கண்காணிப்பு, தடுப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடைசியாக 2011ஆம் ஆண்டு ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு சரியாக 5 ஆண்டுகள் எந்த குழந்தைக்கும் போலியோ பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு போலியோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பெருமளவு விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கும் தெலுங்கானா அரசு ஏற்பாடு செய்துள்ளது. மீண்டும் போலியோ கிருமி இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.