தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளை கொண்டு வர முடியாது... மத்திய அரசு பதில்
டெல்லி : தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளை கொண்டு வர முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும் கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஜூலை 7 ஆம் தேதி மத்திய அரசு, பாரதீய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 6 அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
உச்ச நீதிமன்றத்தின் நோட்டீசுக்கு மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் மத்திய அரசு, அரசியல் கட்சிகளை, தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் கொண்டுவரத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளை பொது அமைப்புகளாக அறிவித்து, தகவல் உரிமை சட்ட வரம்புக்குள் கொண்டு வருவது, அரசியல் கட்சிகளின் சுமூக செயல்பாட்டை பாதிக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
அத்துடன், அரசியல் எதிரிகள் தீய நோக்கத்துடன் மனு செய்து தகவல் கோரினால், கட்சிகளின் அரசியல் செயல்பாடு பாதிக்கப்படும் என்றும், எனவே, அரசியல் கட்சிகள், தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்படக் கூடாது எனவும், மத்திய அரசு கூறியுள்ளது.