70 வயதானால் அரசியலிலிருந்து விலகிவிட வேண்டும்... ஜனார்த்தன் திவேதி கருத்தால் பரபரப்பு
டெல்லி: 70 வயதாகும் தலைவர்கள் அரசியலில் முக்கியப் பொறுப்புகளிலிருந்து விலகி விட வேண்டும் என மீண்டும் தனது கருத்து மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜனார்த்தன் திவேதி.
ஏற்கனவே பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு, பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தவர் தான் ஜனார்த்தன் திவேதி. இவர் அடுத்தமாதம் 69வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்நிலையில், 65 வயது முதல் 70 வயது வரை உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது முக்கியப் பொறுப்புகளில் இருந்து விலகி பிற பதவிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் திவேதி. ஆனால், இந்த வயது வரம்பில் இருந்து நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கட்சி தலைவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்கிறார் அவர்.
சமீபத்தில் பாஜகவில் இருந்து வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஓரங்கட்டப்பட்ட நிலையில் திவேதியின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.