குஜராத் கலவரத்தை முஸ்லீம்கள் மறந்திருக்கலாம், ஆனால் முஸாபர் நகர் கலவரம்.. டொகாடியா விஷமப் பேச்சு!
டெல்லி: முஸ்லீம்கள் குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்தை மறந்திருக்கலாம். ஆனால் கடந்த வருடம் முஸாபர் நகரில் நடந்த கலவரத்தை அவர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் டொகாடியா பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டொகாடியோவுக்கு மூளை கெட்டுப் போய் விட்டது. அவரை மன நல மருத்துவனைக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
முன்னதாக டொகாடியா வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறுகையில், முஸ்லீம்கள் 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தை மறந்திருக்கக் கூடும். ஆனால், முஸாபர் நகரில் கடந்த ஆண்டு நடந்த கலவரத்தை அவர்கள் மறக்கக் கூடாது, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுரித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ரஷீத் ஆல்வி கூறுகையில், டொகாடியாவுக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மூளை கெட்டுள்ளது. உடனே அவரை மன நல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தர வேண்டும் என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், டொகாடியா மீது உடனடியாக வழக்குத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், இப்படித்தான் சிறுபான்மையினருக்கு எதிராக, முஸ்லீம்களுக்கு எதிராக விஸ்வ இந்து பரிஷத் துவேஷத்தைக் கிளப்பி வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்றார்.
சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், மத உணர்வுகளைத் தூண்டுவித்து கலவரத்தை ஏற்படுத்த முயலும் பேச்சு இது. வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.