கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு- முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து ‘வலை வீசி’ தேடி வரும் போலீஸ்!
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணைக்காக 10 பேர் கைது செய்யப்பட்டு இருந்தாலும், இதுவரை முக்கியக் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில், கடந்த செவ்வாய்கிழமையன்று 71 வயது மூத்த கன்னியாஸ்திரி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். கொள்ளை முயற்சியின் போது இந்த பலாத்கார சம்பவ நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரி ரானாகாட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு நேரில் சென்று கன்னியாஸ்திரிக்கு ஆறுதல் கூறினார். மேலும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தூக்கிலிடப் படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கென தனிப்படை வெளிமாநிலங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான பலாத்கார குற்றவாளிகளின் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் இதுவரையில் இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.