அய்யோ.. ஓட்ரா ராமா ஓட்ரா.. அலறி ஓடும் குரங்குகள்.. கிராமத்தினர் செம பிளான்.. சூப்பரப்பு!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கடைகள், வீடுகளுக்குள் புகுந்து அட்டசாகம் செய்யும் குரங்குகளை புலி பொம்மையை கொண்டு கிராம மக்கள் விரட்டி வரும் சம்பவம் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனங்களை சுற்றியுள்ள கிராமங்களில் யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் தொல்லைகள் அதிகமாகவே இருக்கும். இவை வீட்டிற்குள் புகுந்து உணவு பண்டங்களை தூக்கிச் சென்றுவிடும்.
அது போல் மாடிகளில் வற்றல், வடாம் காய வைத்தால் காக்கை, குருவிகள் விடாது. இதற்காக கருப்பு துணியோ குடையோ வைத்திருப்பர். இதை பார்க்கும் காக்கா பயந்து கொண்டு வற்றலை தொடாது.
பொள்ளாச்சி
அது போன்ற ஒரு சம்பவம் பொள்ளாச்சியில் நடந்துள்ளது. அதாவது பொள்ளாச்சி அருகே நவமலை பகுதியில் மலை அடிவார கிராம மக்கள் மலைப்பகுதிகளுக்குள் வசிக்கும் மக்களின் வீடுகள், கடைகள் ஆகியவற்றில் குரங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்கின்றனவாம்.
வனத்துறை
ஒரு சிலர் வாயில்லா ஜீவன் என விட்டுவிட்டாலும் குழந்தைகள், கைக் குழந்தைகள் வைத்திருப்போர் அச்சத்துடன் உள்ளனர். மேலும் சமையலறைக்குள் புகுந்து மளிகை பொருட்களை சேதப்படுத்துவதால் பொருட்சேதம் ஏற்படுகிறது. இதனால் குரங்குகளை பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வனத்துறையிடம் புகார்
இது போன்ற புகார்கள் வரும் இடங்களில் கூண்டுகளை வைத்து குரங்குகளை பிடிக்கும் வனத்துறையினர் அவற்றை வனத்துறைக்கு சென்று விட்டுவிடுகிறார்கள். ஆனால் அங்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் குரங்குகள் மீண்டும் வீடுகளுக்குள் நுழைகிறது.
நூதன முயற்சி
இதனால் குரங்கை சமாளிக்க கிராம மக்கள் புதிய நூதன முயற்சியை கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்கள். ஒவ்வொரு வீட்டு வாசல், கடை வாசல்களில் பெரிய புலி பொம்மையை வாங்கி உட்கார வைத்துவிடுகிறார்கள். இதை பார்க்கும் குரங்குகளோ புலியை பார்த்து அஞ்சி வீட்டுக்குள் வருவதில்லை. மக்களும் ஹேப்பி அண்ணாச்சி!