மே.வங்கத்தில் பெரும் களேபரங்களுக்கு இடையே.. நடந்து முடிந்த 4-ம் கட்ட தேர்தல்.. 80.9% வாக்குகள் பதிவு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 80.9% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதில் முதல் 3 கட்டங்களில் 91 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. இன்று 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்குப்பதிவு நடந்த பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன.
கூச் பிகார் வாக்குச்சாவடியில் திடீரென வன்முறை மூண்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். உள்ளூர் மக்கள் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிகளை பறித்ததாகவும், இதனால் பாதுகாப்பு படையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டதாவும் தகவல் வெளியானது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது குற்றம்சாட்டினார்.
பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். பல இடங்களில் விறுவிறுப்புடன் வாக்களித்தனர். இந்த நிலையில் இன்று மாலை 6.30 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது. சுமார் 80.9% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் அருகில் உள்ள பள்ளி கட்டிடங்களில் வைக்க பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. மேற்கு வங்கத்தில் இன்னும் 4 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.