வாவ்.. ராவணனுக்கு பிரம்மாண்ட பேனர்.. காற்று மாசு ஏற்படாமல் வித்தியாசமாக விஜயதசமி கொண்டாடிய மக்கள்!
காற்று மாசு ஏற்படாமல் வித்தியாசமாக ஒடிசாவில் விஜயதசமியைக் கொண்டாடியுள்ளனர்.
Recommended Video
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் மற்ற நகரங்களுக்கு முன்னுதாரணமாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டுள்ளது.
இந்து மதத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விஜயதசமி. படிப்பு கடவுளான சரஸ்வதி தேவியை பூஜிப்பதற்காக கொண்டாடப்படும் பண்டிகை தான் விஜயதசமி.
ஆனால் இப்பண்டிகைக்கு வேறு காரணங்களும் கூறப்படுகின்றன. அவை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. தென்னிந்தியாவை பொறுத்த வரை, உலகை ஆட்டிப் படைத்த மகிசாசூரன் எனும் அரக்கனை துர்கா தேவி வதம் செய்த நாளாக விஜயதசமி அறியப்படுகிறது.
தமிழகத்தில் திருச்செந்தூர் அருகே உள்ள குளசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதேபோல் மைசூர் தசரா திருவிழாவும் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலம்.
ஆனால் வட மாநிலங்களை பொறுத்த வரை இராவணனை ராமர் வதம் செய்த நாளாக விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. அதனை குறிக்கும் வகையில் பல ஊர்களில் ராவணனின் உருவ பொம்மையை தீ வைத்து எரிப்பது வழக்கம்.
நாளடைவில் இந்த வழக்கத்தால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவது அதிகரித்தது. எனவே சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் ஒடிசா மாநிலத்தில் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஒடிசா மாநிலம் நாயபள்ளி எனும் ஊரில் ராவணனின் உருவ பொம்மைக்கு பதிலாக, பெரிய சைஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டது. அந்த பேனரை எரிப்பதற்கு பதிலாக, ஒருவர் அதில் ஏறி பேனரை கிழித்தார். இதனால் காற்று மாசு தவிர்க்கப்பட்டதாக அந்த ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த முயற்சியை பலரும் பாராட்டியுள்ளனர்.
ஒடிசாவைப் பின்பற்றி மற்ற மாநிலங்களிலும் இதே போல், பண்டிகைகளைக் கொண்டாடலாம் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.