சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவே பொன். ராதாகிருஷ்ணனுக்கு கப்பல்துறையா?
டெல்லி: சேது சமுத்திர திட்டத்தினை நிறைவேற்றவே பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கப்பல் துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதில், 21 பேர் புதிதாக அமைச்சர் பதவி ஏற்றனர். புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பதவியில் உள்ள மத்திய அமைச்சர்கள் வசம் இருந்த பல இலாகாக்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன.
தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் முன்பு கனரக தொழிற்சாலை மற்றும் பொது நிறுவனங்கள் துறையை கவனித்து வந்தார். இப்போது அவருக்கு கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வழங்கப்பட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து கேபினட் அமைச்சர் நிதின் கட்காரி சேது சமுத்திர திட்டம் குறித்து நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பொன்.ராதாகிருஷ்ணனும் சென்றார். விரைவில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் கட்காரி அறிவித்தார்.
தமிழ்நாட்டில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் பாஜகவின் செல்வாக்கு அதிகரிக்கும் என்ற கருத்து உள்ளது. எனவே, தமிழகத்தை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் கப்பல்துறை மற்றும் சாலை வழித்துறை இணை அமைச்சராக இருந்தால் சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற முடியும்.
மேலும் சாலை வசதிகளையும் தமிழ்நாட்டில் உடனுக்குடன் செயல்படுத்த முடியும். எனவே தான் அவருக்கு இந்த துறை வழங்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்பு தரை வழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக டி.ஆர். பாலு இருந்துள்ளார். கப்பல்துறை அமைச்சராக ஜி.கே.வாசன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.