விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு நேற்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
டெல்லி: டெல்லியில் 37 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழக விவசாயிகள், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்த்து பேசினர். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான முயற்சி மேற்காள்ளப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
வறட்சி நிவாரணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 37 நாட்களாக பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எலிக்கறி, பாம்புக்கறி உண்ணுதல், மண்சோறு சாப்பிடுதல், மீசை, தாடியை மழித்தல், மொட்டை போடுதல், அங்கப்பிரதட்சணம் செய்தது, ஆடைகளைக் களைந்து தரையில் உருண்டது என்று பல்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். போராட்டத்தின் உச்சகட்டமாக நிர்வாண போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.
ஆனாலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்ப்பதாக தெரியவில்லை. இருப்பினும் தங்களது கோரிக்கைகளை பிரதமர் மோடி ஏற்கும் வரை ஜந்தர் மந்தரை விட்டு நீங்க மாட்டோம் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து 37-வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் நேற்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறேன். எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.