நான் முதலில் அதிகாரி, பின்னர்தான் பெண்... ஒபாமா வரவேற்புக்குத் தலைமை தாங்கிய பூஜா தாக்கூர்
டெல்லி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைக் கெளரவிக்கும் வகையில் நடத்தப்பட்ட அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சிக்கு நான் தலைமை தாங்கியது பெருமையான தருணமாகும். அதேசமயம் நான் முதலில் ஒரு அதிகாரி, பின்னர்தான் பெண் என்று கூறியுள்ளார் விமானப்படை அதிகாரியான விங் கமாண்டர் பூஜா தாக்கூர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். அதன் பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரியமான முறையில் அரசு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு அதை ஒபாமா ஏற்றுக் கொண்டார். இந்த அணிவகுப்பு மரியாதை விங் கமாண்டர் பூஜா தாக்கூர் தலைமையில் நடந்தது.
வழக்கமாக ஆண் அதிகாரிதான் இந்த பொறுப்பை வகிப்பார். ஆனால் நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக பெண் அதிகாரி தலைமையில் நேற்றைய அணிவகுப்பு மரியாதை நடந்தது. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து விட்டார் பூஜா தாக்கூர்.
Very proud moment that I was commanding the inter-services Guard of Honour:Wing Commander Pooja Thakur #NamasteObama pic.twitter.com/E78eG1H3nf
— India Today (@IndiaToday) January 25, 2015
இதுகுறித்து பூஜா தாக்கூர் கூறுகையில், பயிற்சிக் காலத்திலிருந்தே பெண் அதிகாரிகள், ஆண் அதிகாரிகளுக்கு இணையாகத்தான் நடத்தப்படுகிறார்கள். இதில் ஆண், பெண் என்ற பாரபட்சமே கிடையாது. எனவே நாங்கள் முதலில் அதிகாரிகள், பின்னர்தான் பெண்கள்.
அணிவகுப்பு மரியாதைக்கு நான் தலைமை தாங்கியது எனது வாழ்க்கையில் பெருமைக்குரிய ஒரு தருணமாகும். இது எனக்கு மிகுந்த கெளரவத்தையும், மகிழ்ச்சியையும், பெருமையையும் அளித்துள்ளது என்றார் பூஜா தாக்கூர்.