ஏழைகள் மிகப் பெரிய கனவு காண வேண்டும்: ராகுல் காந்தி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவுக்கு உள்கட்டமைப்பு அவசியம் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது. அத்துடன் உள்கட்டமைப்பை யார் உருவாக்குகிறார்களோ அவர்களுக்கு உணவும் போதுமானதாக இருக்க வேண்டும். நாங்கள் அதை செய்கிறோம்.
நாட்டின் ஏழைகள் மிகப் பெரிய கனவு காண வேண்டும். அன்றாடக் கூலிகளாக இருப்பவர்கள் தங்களது பிள்ளைகளும் ஒருநாள் விமானியாக வலம் வர வேண்டும் என்று கனவு காண வேண்டும். ஏழைகளின் கனவுதான் நாட்டை வளப்படுத்தும்.
இந்த உலகிலேயே மிகப் பெரும் கனவை நீங்கள் காண வேண்டும். இந்த நாட்டில் ஏழைகளின் நிலத்தை எளிதாக பறித்துவிடக் கூடிய நிலைமை இருந்தது. இதைத்தான் நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதா மூலம் தடுத்திருக்கிறோம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அன்றாட ஊதியம் பெறுவோருக்கு இலவசமாக மருந்துகள் வழங்கி வருகிறோம். இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
ஊரக வேலை வாய்ப்பு திட்டம், உணவு பாதுகாப்பு மசோதா, நிலம் கையகப்படுத்துதல் மசோதா ஆகியவற்றை கொண்டுவர முடியாது என்று எதிர்க்கட்சியினர் சொன்னார்கள். ஆனால் நாங்கள் சாதித்துக் காட்டியிருக்கிறோம் என்றார்.