டெல்லியில் கிடைத்த ”முட்டை” – தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் பகுஜன் சமாஜ்!
டெல்லி: டெல்லி தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவிய மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழக்கிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 70 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் அந்த கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
இதேபோல் அண்மையில் நடந்த மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல்களிலும் அந்த கட்சிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை. டெல்லி சட்டசபை தேர்தலில் அக்கட்சி 1.4 சதவீத ஓட்டுகளையே பெற்று இருக்கிறது.

தேசிய கட்சி அந்தஸ்தை ஒரு மாநில கட்சி பெறவேண்டும் என்றால் அந்த கட்சி 4 அல்லது அதற்கும் கூடுதலான மாநிலங்களில் போட்டியிட்டு 6 சதவீத ஓட்டுகளையோ, அல்லது 2 தொகுதிகளையோ கைப்பற்றி இருக்கவேண்டும். ஆனால், இந்த சதவீத ஓட்டுகளையோ, குறிப்பிட்ட இடங்களையோ பகுஜன் சமாஜ் கட்சி பெறவில்லை.
இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே இந்த பிரச்சினை நிலுவையில் உள்ளது. எனவே இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சிக்கு நோட்டீஸ்அனுப்பப்படும். மேலும் மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் இது தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் முழுமை பெற்றுவிடும்" என்று தெரிவித்தனர்.
இதனால் பகுஜன் சமாஜ், தேசிய கட்சி என்னும் அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.