எளிமையின் சிகரம் மாணிக் சர்க்கார்.. 5வது முறையாக முதல்வராகும் வாய்ப்பு பறிபோனது!
இந்தியாவில் சொந்த வீடு கூட இல்லாத திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
Recommended Video
அகர்தலா: இந்தியாவில் சொந்த வீடு கூட இல்லாத திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் 20 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது.
திரிபுராவில் கடந்த 18ம் தேதியும், நாகாலாந்து, மேகாலயாவில் கடந்த 27ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நாகாலாந்து, திரிபுராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தது.
ஆட்சி அமைக்கிறது பாஜக
இந்நிலையில் பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. 20 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்து வந்த மார்க்சிஸ்ட் 19 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்துள்ளது.
முடிவுக்கு வந்த மாணிக் சர்க்கார்
இந்தியாவின் நீண்டகால முதல்வர்களில் ஒருவர் என கூறப்படும் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் இதுவரை 4 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். இந்நிலையில் ஏழை முதல்வரான மாணிக் சர்க்காரின் ஆட்சி அங்கு முடிவுக்கு வருகிறது.
எளிமையின் மறுஉருவம்
இந்தியாவில் சொந்தவீடு கூட இல்லாத முதல்வர் என்று போற்றப்படும் முதல்வர் மாணிக் சர்க்காரை எளிமையின் மறுஉருவம் என்கின்றனர் அம்மாநில மக்கள். நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான முதல்வர் என்ற பெருமையையும் பெற்றவர் மாணிக் சர்க்கார்.
இறங்கவே இல்லை
மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாணிக் சர்க்கார் எப்போதும் வெள்ளை நிற உடையை உடுத்துவதை தனது அடையாளமாக கொண்டுள்ளார். 1998 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற அவர் 20 வருடங்களாக அரியணையில் இருந்து இறங்கவே இல்லை.
கட்சி அலவன்ஸ்
69 வயதான மாணிக் சர்க்காருக்கு முதல்வர் என்ற முறையில் மாத ஊதியமாக 9,200 ரூபாயும் அலவன்சாக 1,200 ரூபாயும் கிடைக்கிறது. அதை அப்படியே கட்சி்க்கு கொடுத்துவிடுவார்.
வீடோ நிலமோ இல்லை
கட்சி தரும் 5,000 ரூபாயில் வாழ்க்கையை நடத்துகிறார். இவருக்கென்று சொந்தமாக வீடோ, நிலமோ கிடையாது. இவரது மனைவி பஞ்சலி பட்டாச்சார்ஜி மத்திய சமூக நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
எளிமைக்கு மற்றுமொரு சான்று
திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் எளிமையை மார்க்சிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சியினரும் புகழ்ந்து பேசுகின்றனர் என்பது இவரது எளிமைக்கு மற்றுமொரு சான்று.
இம்முறையும் முன்னிலை
தொடர்ந்து 4 முறை முதல்வராக இவருக்கு வாய்ப்பளித்த மக்கள் மீண்டும் 5வது முறையாக அரியாணையில் அமர வாய்ப்பளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இம்முறை பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து அழகு பார்த்துள்ளனர் திரிபுரா மாநில மக்கள்.