பஸ் ஸ்டாண்ட்டில் ஆபாசப் படம்... அதிர்ச்சியில் சமைந்து போன பயணிகள்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்த டிவி பெட்டிகளில் திடீரென ஆபாசப் படம் ஓடத் தொடங்கியதால் பஸ்ஸுக்காக காத்திருந்தோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்குள்ள பஸ் நிலையத்தில் இரண்டு டிவி பெட்டிகள் உள்ளன. அதில் விளம்பரம் உள்ளிட்டவை ஒளிபரப்பாகி வந்தன. இந்த நிலையில் திடீரென அந்த டிவிகளில் ஆபாசப் படம் ஓடத் தொடங்கியது. இதைப் பார்த்து பஸ்ஸுக்காக காத்திருந்தவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீஸுக்குத் தகவல் போனது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜார்ஜ் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தியபோது கேபிள் ஆபரேட்டர்தான் தவறுதலாக விளம்பரத்திற்குப் பதில் வில்லங்கமான படத்தைப் போட்டு விட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக கேபிள் டிவி ஆபரேட்டர் மன்சூர் என்பவரைக் கைது செய்து அவரை கோர்ட்டில் நிறுத்தி சிறையில் அடைத்தனர். மன்சூர் மீது அநாகரீகமான காட்சியை ஒளிபரப்பியது, பெண்களை அநாகரீகமாக சித்தரித்தது, ஐடி சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது.