ஒடிஷா போஸ்கோ இரும்பு தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி!
டெல்லி: ஒடிஷா மாநிலத்தில் தென் கொரியாவின் போஸ்கோ நிறுவனத்தின் இரும்பு தொழிற்சாலை அமைக்க மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
ஒடிஷாவில் ரூ52 ஆயிரம் கோடியில் போஸ்கோ நிறுவனம் இரும்பு தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதனால் 8 ஆண்டுகாலம் இத்திட்டம் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பல லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு தேர்தல் நெருங்கும் நிலையிலும் சுற்றுச் சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் அனுமதி கொடுக்காததால் அவரை ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டுக் கொண்டது.
இதனால் ஜெயந்தி நடராஜன் ராஜினாமா செய்தார். அத்துடன் அவர் வகித்த சுற்றுச் சூழல் அமைச்சகம் வீரப்ப மொய்லிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
இதனிடையே தென் கொரியா அதிபர் அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார். இந்நிலையில் தற்போது ஒடிஷாவில் போஸ்கோ தொழிற்சாலைக்கு சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்திருக்கிறது. இத்தகவலை சுற்றுச் சூழல் அமைச்சர் பொறுப்பு வகிக்கும் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.