மும்பை தாக்குதலுக்கு பிறகு கடல் பாதுகாப்பில் முன்னேற்றம்: 'ஒன்இந்தியாவுக்கு' துணை அட்மிரல் பேட்டி
கொச்சி: இந்தியாவின் 69வது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், 'ஒன்இந்தியாவுக்கு' இந்திய கடற்படை துணை அட்மிரல் சுனில் லன்பா அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:
காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை எடுத்துக் கொண்டு அதற்கு ஏற்ப பயிற்சி முறைகளை மாற்றி வருகிறோம். கடலோர காவலுக்கு கடற்படை தற்போது மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மையப்படுத்தப்பட்ட ரேடார் நெட்வொர்க்கை ஏற்படுத்தியுள்ளோம். இதை மேலும் விரிவுபடுத்த உள்ளோம்.
குர்கானிலுள்ள தகவல் மேலாண்மை மற்றும் ஆய்வு மையம், கடலோர காவல் பணியில் முக்கிய பங்காற்றிவருகிறது. கடல்படையில் புதிதாக பல கருவிகளை சேர்த்துக்கொண்டுள்ளோம். சமீபத்தில் ஒருங்கிணைந்த நீர்மூழ்கி துறைமுக பாதுகாப்பு கண்காணிப்பு நடைமுறையை கொச்சியில் அறிமுகம் செய்துள்ளோம்.
கொச்சியை தொடர்ந்து, கார்வார், மும்பை மற்றும் விசாகப்பட்டிணம் துறைமுகங்களிலும் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
26/11 தாக்குதலுக்கு பிறகு (கடல் வழியாக பாக். தீவிரவாதிகள் மும்பைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர்) கடலோர பாதுகாப்பு விவகாரத்தில் பெருமளவில் முன்னேறியுள்ளோம்.
தென் இந்திய கடல்பகுதி முழுவதையும் வரைபடமாக உருவாக்கியுள்ளோம். கடலோர காவல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. அனைத்து படகுகளுக்கும் பதிவு எண் வழங்கப்பட உள்ளது. மீனவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை தரப்பட உள்ளது. இந்த பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடற்படை கப்பல்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது குறித்து கேட்டபோது, "ஒரு கப்பலில் எண்ணை, எரிபொருள், உபகரணங்கள் என பெரும்பாலான இடுபொருட்கள், எளிதில் தீ பிடிக்க கூடியவையாக உள்ளன. எனவே விபத்துகள் எளிதில் ஏற்படுகின்றன. இதை தடுக்க சோதனைகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும் சில நேரங்களில் தவறுகள் நடந்துவிடுகின்றன. பிற நாடுகளை ஒப்பிட்டால் இந்திய கடற்படையில் விபத்துகள் குறைவாக உள்ளதாகவே புள்ளிவிவரங்கள் கூறுகின்றன" என்றார் அவர்.