போஸ்ட் ஆபீஸ் ஊழியர்களின் சீருடையில் மாற்றம்... காந்தி தொப்பிக்கு பதில் போலீஸ் தொப்பி!
அஞ்சலக ஊழியர்களுக்கென பிரத்யேக காதி சீருடையை நிப்ட் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
டெல்லி : தபால் துறை ஊழியர்களுக்கு பிரத்யேக ஆடையை நிப்ஃட் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். காதி ஆடையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் அஞ்சல ஊரியர்களின் சீருடையில் மாற்றம் வர உள்ளது. புதிய சீருடையோடு காந்தி தொப்பிக்கு மாற்றாக போலீஸ் தொப்பி போன்ற புதிய தொப்பியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட அஞ்சலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சீருடையில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி புதிய சீருடையை தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்து அரசிடம் அளித்துள்ளனர். நிஃப்ட் மாணவர்களின் இந்த புதிய சீருடைக்கு மத்திய அரசும் ஒப்புதல் தந்தள்ளதாக தெரிகிறது.
அஞ்சலகத் துறையின் அமைச்சர் மனோஜ் சின்ஹா இது குறித்து கூறியதாவது " பிரதமர் நரேந்திர மோடி காதி ஆடைகளை முன்னிலைப்படுத்துகிறார். நாங்கள் அஞ்சலக ஊழியர்களின் சீருடையில் மாற்றம் கொண்டு வரும் பணியை 25 நாட்களுக்கு முன்னர் தொடங்கினோம். இதன் முடிவில் காக்கி நிறத்தில் காதி நிற சீருடையை கொண்டு வர முடிவு செய்தோம் என்றார்.
நிஃப்ட் மாணவர்களின் வடிவமைப்பு
நிஃப்ட் மாணவர்கள் புதிய சீருடையை வடிவமைத்து அரசிடம் கொடுத்துள்ளனர். அரசும் மாணவர்களின் வடிவமைப்பை ஏற்க திட்டமிட்டுள்ளது, புதிய சீருடையில் இதுவரை போஸ்ட் மாஸ்டர்கள் பயன்படுத்தி வந்த காந்தி தொப்பிக்கு பதிலாக பி-தொப்பி என்று சொல்லப்படும் போலீசார் அணிவது போன்ற தொப்பி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
காவி நிறத்தில் மாற்றம் இல்லை
போஸ்ட் மேன்களின் சீருடை நிறத்தில் எந்த மாற்றமும் இருக்காது, எனினும் சட்டைப்பையின் பாக்கெட் மற்றும் தொப்பியில் சிவப்பு நிறத்தில் இந்தியன் போஸ்ட் என்று அச்சிடப்பட்டிருக்கும். இதே போன்று தோல்பட்டையில் சிவப்பு நிற ஸ்ட்ரிப்புகளும் சீருடையில் இடம்பெற்றிருக்கும் என்று தெரிகிறது.
எவ்வளவு விலை?
இந்த புதிய சீருடைகள் 7 ஆயிரம் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. ஆண்களுக்கான சீருடை ரூ. 1,500 என்றும் பெண்களுக்கான சீருடை ரூ.1,700 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காதி துணிகள் கொள்முதல்
90 ஆயிரம் ஊழியர்களுக்கு புதிய காதி சீருடை தயாரிக்க சுமார் 8 லட்சம் மீட்டர் துணி தேவைப்பட்டது. இவை இமாச்சல பிரதேசம், குஜராத், பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 37 காதி நிலையங்களில் இருந்து துணி விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அஞ்சல ஊழியர்களுக்கு சீருடைப் படியாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது.