ஆதித்ய தாக்ரேதான் முதல்வர்.. போஸ்டர் அடித்து வீதியில் ஒட்டிய சிவ சேனா தொண்டர்கள்.. பாஜக மூவ் என்ன?
Recommended Video
மும்பை: ஒரு பக்கம் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் நடுவே, மகாராஷ்டிராவில், ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஆதித்ய தாக்கரேவை முதல்வராக வேண்டும் என்று கூறி சிவசேனா ஆதரவாளர்கள் சிலர் போஸ்டர் அடித்து ஒட்டியதால் பரபரப்பு நிலவுகிறது.
மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஒர்லி தொகுதியில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும், மறைந்த பால் தாக்ரேவின் பேரனுமான, ஆதித்யா தாக்கரே அந்த கட்சியின் சார்பில் களம் இறங்கினார்.
நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுரேஷ் மானே, என்ற வேட்பாளரை விடவும் 61 ஆயிரத்து 772 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார் ஆதித்ய தாக்கரே.
முதல் மக்கள் பிரதிநிதி
தாக்கரே குடும்பத்திலிருந்து முதல் முறையாக தேர்தலில் களம் இறங்கியது ஆதித்ய தாக்கரேதான். முதல் தேர்தலிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளதால் சிவசேனா தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அவரை முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒர்லி பகுதியில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் ஆதரவாளர்கள்.
முதல்வர் யார்
ஆனால், உத்தவ் தாக்கரே நேற்று அளித்த பேட்டியின் போது, லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, சரிபாதி என்ற பார்முலா ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் நாங்கள் குறைவான தொகுதியில்தான் போட்டியிட்டோம். இப்போது முதல்வர் யார் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டி இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்
துணை முதல்வர்
இரு கட்சிகளும், ஆளுக்கு சரிபாதியாக, இரண்டரை ஆண்டுகாலம் முதல்வர் பதவியை வகிக்க வேண்டும் என்று சிவசேனா விரும்புவதாக தெரிகிறது. ஆனால் இதற்கு பாஜக இன்னும் சம்மதிக்கவில்லை, ஒரு வேளை சம்மதித்து, முதலில் பாஜக தரப்பில் ஒருவர் முதல்வராக பதவியேற்றால் அப்போது ஆதித்ய தாக்கரேவை துணை முதல்வராக்கும் திட்டமும் உள்ளதாம்.
அடுத்த பதவிக்காலம்
இரண்டாவது பாதி ஆட்சிக் காலத்தின்போது, ஆதித்ய தாக்ரேவை முதல்வராகவும் சிவ சேனா திட்டமிட்டுள்ளது. அப்போது பாஜக தரப்பில் ஒருவர் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இதெல்லாம் யூகங்களாக இருக்கிறது. இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.