2021-22-ல் நாட்டின் மின்பற்றாக்குறை இருமடங்காக உயர வாய்ப்பு: ஆய்வில் தகவல்
டெல்லி: இந்தியாவின் மின்பற்றாக்குறை 2021-22-ம் ஆண்டின்போது, இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போது நாட்டின் மின்பற்றாக்குறை 2.6% ஆக உள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக, பல்வேறு மின் உற்பத்தித் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், அதிகரித்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கை, தொழிற்சாலைகள் போன்றவற்றால், மின்சார தேவை மேலும் அதிகரித்தே வருவதாக அசோசெம் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
2021-22ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 8 முதல் 9 விழுக்காடாக தக்க வைக்க வேண்டுமெனில் இந்தியாவின் ஒட்டுமொத்த மின் பற்றாக்குறை 5.6% ஆக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மரபுசாரா மின் உற்பத்தித் திட்டங்களையும் மத்திய அரசு ஊக்குவித்தால் மட்டுமே மின் தேவையை சமாளிக்க முடியும் என்றும் அசோசெம் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர தன்மையில் வைக்க மின் உற்பத்தி வளர்ச்சி ஆண்டுதோறும் 7%-ஆக உள்ளவாறு பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்றும் அந்த ஆய்வுக் கட்டுரை அறிவுறுத்தியுள்ளது.
தற்போது மிக அதிகளவு நிலக்கரியை கொண்டு மின்சாரம் தயாரித்து வருவது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலானது எனவும், நீர் மின்சார உற்பத்திக்கு உரிய முக்கியத்துவமும் கவனமும் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நாட்டின் நீர் மின்சார உற்பத்தி 30% அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த ஆய்வுக் கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது.