ஜிசாட் 6ஏ செயற்கைகோள் தகவல் தொடர்பு துண்டிப்பு- மின் இணைப்பில் பிரச்சினை என இஸ்ரோ அறிவிப்பு
வியாழன் அன்று விண்ணில் ஏவப்பட்ட ஜி சாட் - 6 ஏ செயற்கைக்கோள், சனிக்கிழமை அன்று, தரைத்தளத்துடன் தகவல் தொடர்பை இழந்துவிட்டதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது.
பெங்களூரு: ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ஜிசாட்-6 ஏ செயற்கைக்கோளின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வியாழன் அன்று விண்ணில் ஏவப்பட்ட ஜி சாட் - 6 ஏ செயற்கைக்கோள் தரைத்தளத்துடன் தகவல் தொடர்பை இழந்துவிட்டதாகவும் மின்சார இணைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
எஸ் பேண்ட் வசதியுடன் கூடிய அதி நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட் 6ஏ செயற்கைகோளை, மார்ச் 29ஆம் தேதியன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து, ஜிஎஸ்எல்வி எஃப்8 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
வெற்றிகரமாக பாய்ந்த ராக்கெட்
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிலையில், ஜிசாட் 6 ஏ செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்
செயற்கைக்கோளுடன் தகவல் தொடர்பு துண்டிப்பை இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ஜிசாட்-6 ஏ செயற்கைக்கோளின் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ தலைவர் சிவன்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், மின்சார தொடர்பு பிரச்சினைகள் வரும்போது, செயற்கைக்கோள் தொடர்பை இழப்பது வழக்கம் என்றாலும், மறுபடியும் தொடர்புகொள்ள முடியும். ஆனால், இம்முறை, செயற்கைக்கோளை மீண்டும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார். மீண்டும் செயற்கைக்கோளைத் தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜிஎஸ்எல்வி எஃப் 8
ஜிஎஸ்எல்வி ரகத்தில் 12வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எஃப் 8 மூன்று நிலைகளையும், 415.6 டன் எடையையும் கொண்டதாகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 6-வது கிரையோஜெனிக் என்ஜின் இதில் பொருத்தப்பட்டு உள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க்-2 வகையைச் சேர்ந்தது, ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட்.
தகவல் தொடர்பு செயற்கைக்கோள்
இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்டுள்ள 2,140 கிலோ எடைகொண்ட ஜிசாட் 6ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள், 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஜிசாட்-6 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
தகவல் தொடர்பு துண்டிப்பு ஏன்?
அதன் தொடர்ச்சியாக தற்போது ஜிசாட் 6ஏசெயற்கைக்கோள் தற்போது ஏவப்பட்டுள்ளது. ஜிசாட் 6ஏ செயற்கைக் கோள் இந்திய ராணுவத்திற்கான தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்த பயன்படும். தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன், இஸ்ரோ தலைவராகப் பதவியேற்ற பின் முதலாவது ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது இந்திய விஞ்ஞானிகளுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.