சீமாந்திராவில் காங்கிரஸை முட்டை வாங்க வைத்த பவர்ஸ்டாரின் 'பவர்' பிரச்சாரம்
ஹைதராபாத்: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர் பவன் கல்யாண் அவர் அண்ணன் சிரஞ்சீவியை ஜீரோவாக்கியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்காக நடிகர் சிரஞ்சீவி ஆந்திர மாநிலம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் தம்பியான நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியை துவங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் அவர் தெலுங்குதேசம் கட்சி மற்றும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரமும் செய்தார்.
பவன் கல்யாண் பிரச்சாரம் மற்றும் மோடி அலையால் பாஜக ஆந்திராவில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸோ படுதோல்வி அடைந்துள்ளது.
சீமாந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதிகள் மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகள் ஆகிய அனைத்திலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். பவன் கல்யாணின் பவர் பிரச்சாரத்திற்கு முன்பு சிரஞ்சீவியின் பிரச்சாரம் எடுபடாமல் போயுள்ளது.
இந்த வெற்றியை அடுத்து சீமாந்திரா மக்களின் மனதில் பவன் கல்யாண் ஹீரோவாகியுள்ளார்.