முதல்வரையே சஸ்பெண்ட் செய்த கட்சி.. அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் அரசியல் கலாட்டா
இடா நகர்: அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டுவை அவரது கட்சியான 'அருணாச்சல் மக்கள் கட்சி' அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. அவரோடு துணை முதல்வர் சவ்னா மேயின் மற்றும் 5 எம்.எல்.ஏ.,க்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அருணாச்சல பிரதேச மாநில சட்டசபை, 60 உறுப்பினர் உடையது. இதில், இரண்டு சுயேச்சைகளுடன் சேர்த்து, 47 உறுப்பினர் பலத்துடன், நபாம் துகி தலைமையில் காங்கிரஸ், ஆட்சி அமைத்தது.
ஆனால், நபாம் துகிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கலிகோ புல் தலைமையில், 30 எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பா.ஜ.க ஆதரவுடன் கலிகோ புல் அடுத்த முதல்வராக பதவிஏற்றார். இது சமீபத்தில் அங்கு நடந்த முதலாவது அரசியல் களேபரம்.
இதனையடுத்து நீதிமன்ற தலையீட்டு பிறகு அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக பேமா காண்டு கடந்த ஜூலை மாதம் பதவியேற்றார். சவுனாமீன் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், அருணாச்சல் மக்கள் கட்சி, முதல்வரான பெமா காண்டு தனது கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரோடு, துணை முதல்வர் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இவர்கள் அனைவரும் நீக்கம் செயப்பட்டனர். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இவர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்வதாகவும், அவர்கள் நடத்தும் கூட்டங்களில் கட்சியினர் பங்கேற்கக் கூடாது எனவும் அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியின் தலைவர் காபா பென்ஜியா உத்தரவிட்டுள்ளார். தங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு சட்டசபையில் தனி இடம் ஒதுக்க வேண்டும் எனவும் மாநில சட்டசபை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிகழ்வுகள் அருணாச்சல பிரதேச அரசியலில் மீண்டும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.