வருங்கால வைப்பு நிதியில் ஊழியர் செலுத்தும் தொகையில் வட்டிக்கு மட்டுமே வரி: மத்திய அரசு விளக்கம்
டெல்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் தொகைக்கான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
வருவாய் துறை செயலர் ஹஸ்முக் ஆதியா வெளியிட்டுள்ள விளக்க அறிவிப்பில் பி.பி.எஃப். எனப்படும் சேமநிதியில் செலுத்தப்படும் தொகைக்கு வரி விலக்கு தொடரும் என்றும், தொகையை திரும்ப பெறும் போது வரி விதிக்கப்பட மாட்டாது என்றும், தெரிவித்துள்ளார். மாதம் ரூ.15 ஆயிரம் வரை ஊதியம் பெறுவோர் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்கான உத்தேச வரிவிதிப்பின் கீழ் வரமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
நேற்று தாக்கலான பட்ஜெட் உரையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் தொகையில் 40 சதவகிதத்திற்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும், எஞ்சிய 60 சதவிகித தொகை வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இது ஊதியம் பெறுவோருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்த நிலையில் மத்திய அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
2016 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் தொகையில் 60 சதவிகிதத்திற்கான வட்டிக்கு மட்டும் வரி விதிக்கப்படும் என்று ஆதியா தெரிவித்துள்ளார். அசலுக்கு வரி விதிக்கப்படமாட்டாது என்று ஹஸ்முக் ஆதியா விளக்கம் அளித்துள்ளார்.